இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களில் மஹாரஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதங்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனாவுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், “கேரளா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் 7 நாள் கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர், கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும்.
சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் மருத்துவமனை, கோவிட் கேர் மையங்களில் தங்க வைக்கப்படுவர். பரிசோதனையில் நெகட்டிவ் வந்து அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவர். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புபவர்கள், பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் கரோனா பரிசோதனையை எடுத்திருக்க வேண்டும். அதனை அரசு இணையத்தளத்தில் அப்லோட் செய்திருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.