நாகர்கோவில்:-
பள்ளிச் சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை, காவலர் வீட்டு சிறுமி, பிரபல நடிகர் வீட்டு இளம்பெண் வரை 70க்கும் மேற்பட்ட பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி, மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. காசியின் தந்தை தங்கப்பாண்டியன், அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்தார். உடன் படிக்கும் சிறுமியரை பாலியல் வலையில் வீழ்த்த, காதல் நாடகம் ஆடுவாராம் காசி. அந்த சிறுமியர் காதல் வலையில் வீழ்ந்ததும் அவர்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வார் என்கின்றனர் போலீசார்.
காதல் வலையில் விழும் 16 முதல் 20 வயது பெண்களை தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வார். தனக்கும் அவர்களுக்குமான அந்தரங்க வீடியோ கால்களை அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்து வைத்துக் கொள்வார். பின்னர் அவர்களது தொடர்பு எண்களைத் தனது நண்பர்களிடம் கொடுத்துப் பேசச் சொல்வார்
நண்பர்களுடனான பேச்சுவார்த்தைகளை சுட்டிக் காட்டியே தனது நட்பை முறித்துக் கொண்டு விடுவார். இப்படி பள்ளிச் சிறுமியரை தனது பாலியல் வெறிக்குப் பயன்படுத்தும் காசி, வசதிபடைத்த இளம்பெண்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயைக் கறக்க திட்டமிடுவார். அவர்களைத் தொடர்பு கொண்டு, காதலிப்பதாக கூறி திருமணம் செய்தால் உன்னைத்தான் திருமணம் செய்வேன் என உருகி உருகி மயக்குவார்
இப்படி பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளைக் காதலிப்பதாகக் கூறி அவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாயைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கறந்துள்ளார். ஒரு கட்டத்தில் காசி தன்னை ஏமாற்றுவது தெரிந்த அந்தப் பெண் காசியிடம் கேட்ட போது அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டவே, அந்தப் பெண் சத்தமில்லாமல் விலகி விட்டார்.
அவரைப் போல காசியிடம் சிக்கியவர்தான் சென்னையைச் சேர்ந்த அந்த இளம் பெண் டாக்டர். பொள்ளாச்சி பற்றிய வீடியோவில் காசிக்கு எதிராக கருத்து சொன்ன பெண் டாக்டரை பேசிப் பேசித் தனது காதல் வலையில் விழவைத்தார் காசி
ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணைத் தனது குடும்பத்தினரரிடம் அறிமுகப்படுத்தி வைக்கப் போவதாகக் கூறி நாகர்கோவிலுக்கு வரவழைத்தார்.
நாகர்கோவிலுக்கு அவர் சென்றதும் குடும்பத்தில் நிலைமை சரியில்லை என்று கூறி கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனக்குத் தெரிந்த ஒரு ஹோட்டலில் அந்தப் பெண் டாக்டரை தங்க வைத்தார் காசி. அப்போது பெண் டாக்டருக்குத் தெரியாமல், அந்த அறையில் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார்
இதையடுத்து திருமணம் செய்தால் பெண் டாக்டரைத் தான் திருமணம் செய்வேன் என காசி நாடகமாடியுள்ளார். தனது குடும்ப உறுப்பினருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக பெண் டாக்டரிடம் இருந்து ஒரு லட்சம் இரண்டு லட்சம் என ஆறரை லட்சம் ரூபாய் வரை கறந்துள்ளார் காசி
இந்த நிலையில்தான் காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெண் டாக்டரைத் தொடர்பு கொண்டு காசியின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான பெண் டாக்டர், காசியிடம் இருந்து விலகத் தொடங்கினார். ஆத்திரமடைந்த காசி, தினசரி பெண் டாக்டரை பணம் கேட்டு அதிகமாக தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்
பெண் டாக்டரோ பணம் தர முடியாது ஒரேயடியாக மறுத்து விட்டார்; அப்போதுதான் காசி தனது நிஜசொரூபத்தைக் காட்டியுள்ளார். பணம் தராவிட்டால் பெண் டாக்டரின் அந்தரங்கப் படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் பெண் டாக்டர் அதற்கு மசியாமல் போகவே, புதன்கிழமை அன்று, தனது போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் பெண் டாக்டர், கன்னியாகுமரி விடுதியில் தங்கியிருந்த போது ரகசிய கேமராவில் எடுத்த அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டுள்ளார் காசி
அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர், உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு ஆன்லைனில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத், உடனடியாக நடத்திய விசாரணையில் நடந்தது அனைத்தும் உண்மையே எனத் தெரியவந்தது
இதையடுத்து கோட்டாறு காவல்நிலைய போலீசார் காசியைக் கைது செய்து அவரிடம் இருந்து செல்போனைப் பறிமுதல் செய்தனர். 3 கட்டங்களாக பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 70க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்கள், படங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில், சென்னையில் வசிக்கும் பிரபல நடிகர் ஒருவரின் மகளையும் காசி தனது காதல் வலையில் வீழ்த்த முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. அந்த நடிகர் காவல்துறையை அணுகியதால் காசி பயந்து போய் ஒதுங்கி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது
காசியின் செல்போனில் உள்ள விஷயங்கள் வெளியே வந்தால், நாகர்கோவில் இன்னொரு பொள்ளாச்சியாக வெடிக்கும் என்கின்றனர் போலீசார்.