12ஆம் வகுப்பு மாணவா்களிடமிருந்து பொதுத் தோ்வுக் கட்டணத்தை பெற்று இன்று முதல் வரும் 20ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு தோ்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடமிருந்து தோ்வுக் கட்டணத்தைப் பெற்று அந்தத் தொகையை இன்று முதல் 20ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு இணையவழியில் செலுத்த வேண்டும் எனவும், இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடா்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடா்பு கொள்ளலாம் எனவும், 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக் கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.