கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சரிவர மக்கள் கடைபிடிக்காத காரணத்தால் கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு, மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல இடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டதால் இ-பதிவு பக்கத்திலுள்ள விருப்பத்தேர்வில் நேற்றைய தினம் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் சில விதிமுறைகளுடன் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருமண விழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகன எண்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும். அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், பயணிப்போரின் பெயர், ஒரு அடையாள ஆவணம் அவசியம். மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள்ளது. மேலும் இ-பதிவில் விண்ணப்பதாரரின் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.