நாடுமுழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்து அதை அமல்படுத்தியும் வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆட்சியர் சமீரன் மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவில் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முறையாக பின்பற்றி வருகிறார்களா என ஆட்சியர் சங்கரன்கோவில் நகர் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கோவில் வாசலில் பிரபல ஸ்வீட் கடை முன்பு 12 மணிக்கு மேல் கூட்டமாக டீ குடித்துக் கொண்டும் பொருட்கள் வாங்கியும் சென்றதை கண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைக்கு நகராட்சி அதிகாரிகளை உடனே சீல் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து உணவு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்த பின்பு நகராட்சியில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.