தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல, மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
அதனையடுத்து இதனை சமாளிப்பதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா நிதி கொடுத்து உதவ அனைவரும் முன்வர வேண்டும் என தமிழக மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதனையேற்று பலரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உலக நாடுகளிடம் இருந்து தமிழகத்திற்கு உதவிகளை பெற்று வருகிறார். மேலும் பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் தொடங்கி தடுப்பு நடவடிக்கைகளுக்கான வல்லுநர் ஆலோசனை வரை பல உதவிகளை பெற்று தந்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அமெரிக்காவில் படித்தவர். அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பணிபுரிந்துள்ளார். அதனையடுத்து ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், பின்னர் சிங்கப்பூர் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அதன்பிறகு பணியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்ட இவர், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு தலைமை தாங்கி வந்தார். நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் சுமார் 20 ஆண்டுகள் சர்வதேச அளவிலான அனுபவத்தைக் கொண்டவர் என்பதால், திமுக தலைமை இவரை தமிழகத்தின் நிதி அமைச்சர் பொறுப்பை கொடுத்துள்ளது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உலகளவில் பல நண்பர்களை கொண்டுள்ளதால் தமிழகத்திற்காக சர்வதேச உதவிகளை பெற்று வருகிறார். அந்தவகையில் தற்போது அமெரிக்காவின் சமூக செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் மூலம் தமிழகத்திற்கு உதவி பெற்று தந்துள்ளார்.
ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் அமெரிக்க வரலாற்றின் மாபெரும் கறுப்பின போராளிகளில் ஒருவரும் தற்போது ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும் ஆவர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மதிக்கக் கூடிய மிகப்பெரிய கறுப்பினத் தலைவர் ஜெஸி ஜாக்சன் சீனியர். அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் களத்தில் நின்று கடைசி வரையும் போராடியவர். இந்நிலையில் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் மூலம் தமிழகத்திற்கு பெரும் உதவி கிடைக்க உள்ளது.
இதனையடுத்து நேற்று தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஜூம் மீட்டிங் மூலம் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் உடன் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து விவாதித்தார். அத்தோடு அமெரிக்காவிடம் இருந்து தமிழகத்துக்கு உதவி கிடைக்க வேண்டும். இது தொடர்பாக நீங்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள 8 கோடி கோவேக்சின்களை வெளி நாடுகளுக்கு உதவ முடிவு செய்துள்ளது. அதில் ஒரு பங்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பி.டி.ஆர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த ஜூம் மீட்டிங்கில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரும் தமிழருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்
இதனையடுத்து பேசிய ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர், “முதல்வர் ஸ்டாலின் அவர்களே நீங்கள் சிறந்த தலைவர் உதவிகள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு உதவிகள் வந்து கொண்டிருக்கிறது. விடியல் விரைவில் வர இருக்கிறது. மன உறுதியுடன் இருங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெல்வோம். சுவாசக் கருவிகள், ஆக்சிஜன், மருந்துகளை அனுப்பி வைக்கப் போகிறோம். மனதை தளர விடாதீர்கள் உங்களுக்கு உதவிகள் வரப்போகின்றன, நன்றி” என தெரிவித்தார்.
தமிழகத்திற்கு இதன் மூலம் பெரும் உதவிகள் வரவுள்ளது. விரைவில் இதுகுறித்து ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்டுகிறது. நிதியமைச்சரின் இந்த செயலை பார்த்து பலரும் அசந்து வருகின்றனர்.