இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை .
இந்நிலையில் டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில் மும்பை மலட் பகுதியைச் சேர்ந்த ஷாஹ்னாவாஸ் ஷேக் என்பவர் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக தன்னுடைய சொந்த செலவில் இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுத்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே இந்த சேவையை செய்து வருகிறார்.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஷாஹ்னாவாஸ் ஷேக் தன் குழுவினருடன் சேர்ந்து தனியாக கட்டுப்பாட்டு அறை அமைத்து நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.22 லட்சம் மதிப்பிலான காரை விற்ற அவர், அதன் மூலம் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி நோயாளிகளுக்கு வழங்கி உள்ளார். இவரின் இந்த மகத்தான சேவைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மும்பை மக்களால் ஆக்சிஜன் மனிதர் என்று அழைக்கப்படும் ஷாஹ்னாவாஸ் ஷேக் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Corona #Coronapositive #Covid19 #India #Centralgovt #Tamilthisai