ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஒடிசாவில் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி இரவு 7 மணியளவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டதில் தண்டவாளத்தில் இருந்து ரயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 2 பயணிகள் ரயில், 1 சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் பல தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.