தமிழகத்தில் நாளை ஊரடங்கு முடிய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள போதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 12 மெகா தடுப்பூசி முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
எனினும் உருமாற்றமடைந்த புதிய வகை ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மதுரை ஆகிய சர்வதேச விமானங்கள் தரையிறங்கும் விமான நிலையங்களில் சுகாதாரத்துறையின் சார்பில் தனித்தனியே தனிஅலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மருத்துவர்களோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தென்ஆப்பிரிக்கா, சீனா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறி காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் தொடர்ந்து இருக்கும் நிலையில் புதிய வகை வைரஸ் பிற நாடுகளில் பரவிவரும் நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.