திருச்சி ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சந்தியா – ஜெயராமன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை 1948 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மைசூரில் பிறந்தது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0141.jpg)
மைசூர் அரண்மனையில் சிறப்பான சேவையாற்றியதற்காக அரண்மனை வாரிசுகளுக்கே உரிய பெயரின் முன் ”ஜெய” எனும் சொல்லை சேர்த்துக் கொள்ளும் பெருமைமிக்க தகுதியை மன்னர் ரங்காச்சாரி அவர்களின் குடும்பத்திற்கு வழங்கியிருந்தார். அதன்படி பிறந்த அந்த குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0144.jpg)
ஜெயலலிதாவுக்கு ஒரு வயதானபோது அவரின் தந்தை ஜெயராமன் மறைந்தார். அதன் பின் தம் குழந்தைகளின் எதிர்காலம் கருதி சென்னையில் தங்கி சினிமாவில் நடித்துவந்த தன் தங்கை வித்யாவதியிடம் தன் இரு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தார் சந்தியா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0142.jpg)
சென்னை வந்த சந்தியாவிற்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது.சினிமாவில் பிஸியான நடிகையானதால் சந்தியாவால் குழந்தைகளைப் சரியாக பராமரிக்க முடியவில்லை. பிள்ளைகளை நேரடி பராமரிப்பில் வளர்க்க முடியாத நிலையில் பெங்களுரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் சந்தியா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0145.jpg)
ஜெயலலிதாவுக்கு பத்து வயதானபோது சந்தியா சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். பின் ஜெயலலிதா சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0147.jpg)
1963 ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளித்தேர்வில் ஜெயலலிதா மாநிலத்திலேயே முதல்மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0146.jpg)
அவருக்கு கல்லுாரியில் தொடர்ந்து படிக்க மத்திய அரசு ஸ்காலர்ஷிப் வழங்கியது. ஆங்கிலத்தில் மிகப் புலமை பெற்றிருந்த ஜெயலலிதா எதிர்காலத்தில் கல்லுாரியில் ஆங்கில விரிவுரையாளராகவே விரும்பினார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0150.jpg)
ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாத்துறைக்கு திசைமாறியது. எட்டு வயதில் முதன்முறையாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ‘ஸ்ரீசைல மகாத்மியம்’ என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமானார் ஜெயலலிதா.
குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்றாலும் சினிமா மீது பெரிய நாட்டம் இல்லை.
கர்ணன் படத்தின் நுாறாவது நாள் விழாவிற்கு தாயாருடன் சென்றபோது பிரபல இயக்குநர் பி.ஆர்.பந்துலு ஜெயலலிதாவை தன்னுடைய கன்னடப் படத்தில் நடிக்க வற்புறுத்தினார். தாயின் வார்த்தைகளுக்காக விருப்பமில்லாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஜெயலலிதா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0154.jpg)
அதை தொடர்ந்து வெண்ணிற ஆடையில் நடிக்க ஒப்பந்தமானார் ஜெயலலிதா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0151.jpg)
பின் கன்னடத்தில் அறிமுகம் செய்த அதே பந்துலு தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கவிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்தார். அந்தத் திரைப்படம் ஜெயலலிதாவின் வாழ்வை மாற்றியமைத்தது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0155.jpg)
படப்பிடிப்பில் யாருடனும் அரட்டை அடிக்காதது, புறம் பேசாதது, ஓய்வு கிடைத்தால் ஆங்கில நாவல் படிப்பது, மிதமிஞ்சிய அறிவும் திறமையும் போன்ற ஜெயலலிதாவின் குணங்கள் எம்.ஜி.ஆருக்கு அவர் மேல் மதிப்பைக் கூட்டின.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0156.jpg)
தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தார். ஒரு சில வருடங்களில் உச்சக்கட்டப் புகழடைந்தார். எம்.ஜி.ஆருடன் மொத்தம் 28 படங்களில் நடித்து அதிகப்படங்களில் இணைந்து நடித்த நடிகை எனப் புகழ்பெற்றார் ஜெயலலிதா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0157.jpg)
சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற அப்போதைய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஜெயலலிதா.
‘ஸ்ரீசைல மகாத்மியத்தில்’ குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஜெயலலிதா அவரது 127-ம் திரைப்படமான ‘நதியைத்தேடி வந்த கடல்“ உடன் தன் திரைப்பயணத்தை முடித்துக்கொண்டார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0152.jpg)
இவர் நடித்த 127 படங்களில் 30 க்கும் மேற்பட்டவை 100 நாட்களைத்தாண்டி ஓடி சாதனை படைத்தவை.
தனது சொத்துக்களின் மீது மட்டுமே உறவு கொண்டாடிய சில உறவினர்களால் சினிமா உலகிலிருந்து விலகத் தொடங்கினார். இருப்பினும் தனக்குப் பிடித்த நடனக்கலையை அவர் கைவிடவில்லை.
நாட்டியக்குழுவில் கவனம் செலுத்திவந்த ஜெயலலிதாவின் வாழ்வில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில் நிகழ்ந்த நாட்டிய நிகழ்ச்சி அவரது அரசியல் பயணத்திற்குக் கதவைத் திறந்து விட்டது. ஆர்.எம்.வீரப்பன் மூலம் பல வருட இடைவெளிக்குப்பின் எம்.ஜி.ஆரை அவர் சந்தித்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0148.jpg)
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0158.jpg)
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தனது கட்சியில் சேர்த்து கொள்கை பரப்புச் செயலாளராக்கினார்.
1986-ல் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ஆறடி உயர தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோலை, கட்சி சார்பில் கொடுத்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0161.jpg)
அதை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடமே திருப்பிக்கொடுத்தார். இதன் மூலம் தனது அரசியல் வாரிசு ஜெயலலிதாவே எனச் சொல்லாமல் சொன்னதாக ஜெயலலிதா ஆதரவாளர்கள் பேசினர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0160.jpg)
இந்நிலையில்1987 ம் ஆண்டு டிசம்பர் 24 தேதி எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் காலமானார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0163.jpg)
எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது ஜானகி முதல்வரானார். ஆனால் 24 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0164.jpg)
அதன் பின் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. அதிமுக ஜானாகி அணி ஜெயலலிதா அணி என இரு அணிகளாகப் பிரிந்தது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0165.jpg)
அடுத்துவந்த 1989-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்தித்தன. இதில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் ஜானகி அணி ஒரே இடத்தைப் பெற்று படுதோல்வியைத் தழுவியது.
ஜெயலலிதா அணி 21.15% வாக்குகள் பெற்று தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0167.jpg)
1989 பிப்ரவரியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு பிரிவுகளும் இவருடைய தலைமையில் இணைந்தது. பின், ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0166.jpg)
1991-ல் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. ஜெயலலிதா முதல்முறை முதல்வர் ஆனார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0159.jpg)
அதன் பின் ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்றவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்புத் திட்டம், ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம், இலவச மிதிவண்டி திட்டம் இவையெல்லாம் பிற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றிய திட்டங்களாகும்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0170.jpg)
பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி துணிச்சலான பெண்மணி என்று அகில இந்திய அளவில் பேசப்படும் தலைவராக திகழ்ந்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0168.jpg)
அ.தி.மு.க.வில் இணைந்தது முதல் மறைந்தது வரை சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0171.jpg)
அந்த வகையில் இரும்பு பெண்மணியாக தமிழக மக்கள் நெஞ்சங்களில் நீக்கமற இன்றளவும் நிறைந்திருக்கிறார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200223-WA0169.jpg)