தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளதாக இரு கட்சி தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர். இதன் மூலம் கூட்டணியை உறுதி செய்ததுடன் கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்பின் என தெரிவித்தனர்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ஐ.ஜே.கேவை சேர்ந்த நிர்வாகி ரவிபாபு ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை அவர் கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர். நேற்று மூன்றாவது அணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்தித்துள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பிற்கு பிறகு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ”நல்ல எண்ணங்களை கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலிடம் பேசினேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக கமல்ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்தோம். ஆனால் இந்த தேர்தலுக்காக எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் அதிமுக நடத்தப்படாமல் இருந்தது. தொடர்ந்து பயணித்த எங்களை அழைத்து பேசியிருக்கலாம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. இந்த கூட்டணி இறுதி செய்யப்பட்டால் முதலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்வோம். முதல்வர் பதவி குறித்தெல்லாம் பின்னர் முடிவு செய்யப்படும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்” என தெரிவித்தார்.