தோஹா:-
ஜார்ஜ்.W. புஷ் அதிபராக இருந்த காலம் தொட்டு 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா – தலிபான்கள் இடையே இன்று வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது.
இதில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். பாகிஸ்தானுக்கும் கத்தார் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 2001ம் ஆண்டுமுதல் சண்டை நடந்து வருகிறது.
இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் கடந்த 2002 முதல் 14,000 அமெரிக்க வீரர்கள் ஆஃப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா செலவிட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை திரும்பப் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார்.
இதையடுத்து, அமெரிக்க தூதர் ஸால்மே கலீல்ஸாத் (Zalmay Khalilzad) தலைமையில் தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆஃப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் இருந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா – தலிபான்கள் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று மாலை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இந்த உடன்படிக்கை மூலம், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக ஆஃப்கனில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுகின்றனர்.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட 24 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில் வெளியுறவு துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, கத்தாருக்கான இந்திய தூதர் P.குமரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்.
முன்னதாக காபூல் சென்ற ஹர்ஷ்வர்தன், ஆஃப்கன் வெளியுரவு அமைச்சர் ஹரூன் சக்கான்சூரி-யை சந்தித்து ‘ஆஃப்கனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுவதற்கு இந்தியாவின் ஆதரவை தெரிவித்தார் என்று இந்திய வெளியுறவு துறை செய்திதொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்தார்.
ஆஃப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
ஆஃப்கன் நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை இந்தியா தான் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அங்கு பல்வேறு மறுசீரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.